தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் செயல் இழந்து வந்தன. உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தெலுங்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரத்பாபு உடல் வேனில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் சரத்பாபு உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சரத்குமார், சூர்யா, கார்த்தி, ஒய்.ஜி. மகேந்திரன், ராதிகா சரத்குமார், சுகாசினி , டைரக்டர் பாக்யராஜ், நடிகை பூர்ணிமா உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சரத்பாபுவின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், சரத்பாபு நடிகர் ஆவதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்கள். நடிகர் சரத்பாபுவின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. மிகவும் அருமையான மனிதர், நல்ல நண்பர், என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் சரத்பாபு. நாங்கள் இணைந்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்கள்’ என்று அவர் கூறினார்.
இன்று மாலை சரத்பாபுவின் உடல் சென்னையில் தகனம் செய்யப்படுகிறது.