Skip to content
Home » 3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

3முறை நீட் தோல்வி…. மாணவன் தற்கொலை…. அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை

 சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனினும் மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் என தந்தையிடம் நம்பிக்கையோடு கூறினார்.

இதற்காக நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார். நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர். 2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனகுழப்பத்தில் இருந்தார்.

 இதனால் விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த செல்வம் இன்று அதிகாலை மாடியில் உள்ள அறையில் கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர்  ஸ்டாலின்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!