சென்னையை அடுத்த புழலில் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத குடிநீர் குழாய் திடீரென உடைந்ததால், சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக பூமிக்கு அடியில் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று காலை புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
குழாய் உடைந்ததில் தண்ணீர் பீறீட்டு வெளியேறியதால், சாலையின் ஒரு பகுதி முழுவதுமாக உள்வாங்கி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வரும் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ளது.
