Skip to content
Home » மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்க பாஜக  கவர்னர்களை பயன்படுத்துவதாக  அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாடு, பஞ்சாப்,  கேரளா மாநில கவர்னர்கள் ஆளுங்கட்சிகளுக்கு  நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில்  மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன.

பஞ்சாப், கேரள மாநில அரசுகளின் வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவர்னர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அல்ல, மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என   கூறியது. இந்த நிலையில்  தமிழ்நாடு கவர்னர்  10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்  கடந்த மாதம்  13ம் தேதி திருப்பி அரசுக்கே அனுப்பினார்.

உடனடியாக  தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி அந்த மசோதாக்களை  மீண்டும் சபையில் நிறைவேற்றி  கவர்னருக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் இன்று  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே , அரசு மீண்டும் மசோதாவை அனுப்பினால் அதற்கு ஒப்புதல் கொடுத்தாக வேண்டும் என்ற மரபை  மீறி கவர்னர் ரவி , 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசுக்கு கவர்னர் தகவலும் தெரிவித்து விட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததும், தலைமை நீதிபதி சந்திர சூட்,  கவர்னர்  ஏன் இப்போது மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அவர்  பெண்டிங்கில் வைத்திருந்த காலத்திலேயே  ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே, கவர்னரிடம்  குழப்பம் இருக்கிறது.  ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டவர். விரிவான அதிகாரம் உள்ளவர்.

சட்டத்தை முடக்கவோ, செயலிழக்க செய்யவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. இந்த பிரச்னைக்கு ஆளுநர் தீர்வு காணவேண்டும்.  ஆளுநர்,  முதல்வர் இடையே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.  ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள்  உத்தரவு பிறப்பித்து தீர்வு காண நேரிடும்.  இந்த முட்டுகட்டைகளுக்கு  கவர்னர் தான் தீர்வு காணவேண்டும்.  முதல்வருடன் கவர்னர் அமர்ந்து பேசி தீர்வு கண்டால் வரவேற்போம்.  முதல்வரை  நேரில் அழைத்து  பேசுங்கள்.

இவ்வாறு கூறிய  தலைமை நீதிபதி வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!