Skip to content
Home » சமூக நீதி பட்ஜெட்…. முதல்வர் ஸ்டாலின் கருத்து

சமூக நீதி பட்ஜெட்…. முதல்வர் ஸ்டாலின் கருத்து

  • by Senthil

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.அதன் விவரம் வருமாறு:

முதல்வர் மு.க. ஸ்டாலின்:  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு; அது நாளை முதல் நனவாக வேண்டும் .பட்ஜெட் நிதியை மட்டுமன்றி சமூக நீதியை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதில் ஈரமும், இதயமும் உள்ளது. அமைச்சர்களும், ஆட்சியர்களும், மாவட்ட நிர்வாகமும் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ:  தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம். இதற்கு மேல் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாடு இந்தியாவிற்கு பல துறைகளில் வழிகாட்டி வருகிறது .ஏற்றுமதியில் முதன்மையாக உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 65% நிதியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது என கூறினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் :

சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் பெயர்த்து வழங்கவும் தொல்லியல் ஆய்வுகளை மேலும் ஆறு மையங்களுக்கு விரிவுபடுத்தியிருப்பதும், கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப்படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உட்பட காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளும் புனரமைக்கும் திட்டமும், 2 ஆயிரம் மேல்நிலைத் தொட்டி கட்டும் திட்டமும் முக்கியமானது. இடை பாலினத்தவர்களுக்கு கல்வி, விடுதி இலவசமாக வழங்குவதும், கல்லூரி கல்வி செலவை அரசே ஏற்பதும் அவர்களின் சமூக ஒப்புதலுக்கு வழிவகுக்கும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 720 கோடியும் மாணவர்கள் கல்விக் கடன் வழங்குவதும் உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ 1000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ் புதல்வன் திட்டமும் வரவேற்கத்தக்கது.

பொதுப் போக்குவரத்துப் பயணிகள் வசதிக்காக மூன்றாயிரம் புதிய பேருந்துகள் வாங்க கவனம் செலுத்தியுள்ள நிதிநிலை அறிக்கை, போக்குவரத்துத் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாத்து, அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்கவும் முன் வரும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. சென்னை பெருநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் முறையில் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் செய்வது பொருத்தமானது. தீவிரமாக நகர்மயமாகி வரும் நிலையில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு மேலும் கூடுதலாக நிதித் தேவை உருவாகும். குடிசைகள் இல்லா தமிழ்நாடு முத்தமிழறிஞர் கலைஞரின் நீண்ட காலக் கனவாகும்.

அதனை நனவாக்கும் முயற்சியில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியதால் பெரும் சவாலை சந்தித்த போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்து விட்ட பாஜக ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனைகளை விதித்து நிதித் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.

வரும் ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என உறுதியளித்துள்ள நிதிநிலை அறிக்கை அரசுத்துறைகளிலும், நிறுவனங்களிலும் பத்தாண்டுகளுக்கும் மேலான ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம்.காலமுறை ஊதியம், ஆசிரியர், அரசுப் பணியாளர் பழைய ஓய்வூதியம் போன்றவை இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே நீடிக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என குறிப்பிட்டுள்ளார்/

தளி ராமச்சந்திரன்( இந்திய கம்யூ எம்.எல்.ஏ):  குடிசையில்லா தமிழகம் திட்டத்தையும், காலை சிற்றுண்டி திட்டம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1,000 வழங்குவதையும் வரவேற்கிறோம்  ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் என்றும் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:  தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை எமக்களுக்கு தேவையான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கூடுதலாக வருவாய் இருந்தபோதிலும் எந்த ஒரு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!