கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட கிளை தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆணையாளராக கோவை மாவட்ட செயலாளர் தங்கபாசு மற்றும் துணை தேர்தல் ஆணையாளராக மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜா செயல்பட்டனர்.
மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்ட தலைவராக ராஜா, மாவட்ட செயலாளராக ஜெயராஜ், மாவட்ட பொருளாளராக தமிழரசி, மாவட்ட துணை தலைவர்களாக
செல்லமுத்து, சத்தியமூர்த்தி, உண்ணாமலை ஆகியோர்களும், மாவட்ட துணைச் செயலாளராக அருள்குழந்தை தேவதாஸ், சுப்பிரமணியன், யசோதா ஆகியோர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலுக்குப் பின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு முரண்பாடுகளை சரி செய்தல், ஆன்லைன் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், வருகின்ற 19-ஆம் தேதி சென்னையில் டிட்டோஜாக் உண்ணாவிரத போராட்டத்தில் அதிகப்படியான நபர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.