திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார். அண்ணா பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் திமுகவின் விழாக்கள் நடக்கும்போது இந்த அண்ணாசிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரி்யாதை செலுத்துவது வழக்கம்.
இன்று காலை இந்த அண்ணா சிலையின் நெற்றி பகுதியில் குங்குமப்பொட்டு வைத்து அந்த குங்குமத்தை அவரது சிலை மீது பூசி இருந்ததை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தனர் . இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.
இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி திமுக கவுன்சிலர் முருகானந்தம் , வட்டச் செயலாளர் தமிழ் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சிலை முன் திரண்டனர்.
அண்ணா சிலைக்கு குங்கும பொட்டு வைத்து சிலை மீது குங்குமத்தை பூசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக சிலை மீது இருந்த குங்கும சாயத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்து சிலைக்கு பூட்டு போடப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருகில் உள்ள கோவிலில் இருந்து குங்குமத்தை எடுத்து வந்து சிலை மீது பூசி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பூசிய நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.