Skip to content
Home » திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

  • by Senthil

திருச்சி ஜி கார்னர்  மைதானத்தில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில்  அதிமுக 51ம் ஆண்டு விழா,  எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார்கள். இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

இதில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம்,  மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன்,
வெல்லமண்டி நடராஜன்,கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி,ஜே.சி.டி பிரபாகர் , மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாடு குறித்து கூட்டத்தில் ஆலோசிகப்பட்டது. இந்த கூட்டத்துக்கு  பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குவார் என கூறப்பட்ட நிலையில் அவர் கூட்டத்துக்கு வரவில்லை.

கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது:

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா  மாநாடு  நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரை தி.மு.க விலிருந்து நீக்கிய பிறகு அவருக்கு இருந்த எண்ணத்தின் அடிப்படையில் தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என சட்ட விதியை உருவாக்கினார்.

ஜெயலலிதா அதனை பின்பற்றியதால் தான் அவருக்கான உச்சபட்ச மரியாதையாக அவருக்கு நிரந்தர பொதுச்செயலாளராக தொண்டர்கள் அறிவித்தார்கள். அந்த மரியாதையை ரத்து செய்துள்ளது இந்த சதிகார கூட்டம்.

நான் மட்டும் பெரியாரின் பேரன் அல்ல அ.தி.மு.க வில் இருக்கும் ஒன்னறை கோடி பேரும் பெரியாரின் பேரன்கள் தான்.

நாம் மீண்டும் தொடங்கிய தர்ம யுத்தம் எந்த வித பிசுறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்இறுதியில் நாம் தான் வெற்றி அடைய போகிறோம்.

நம்முடைய சக்தியை நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் 24 ம் தேதி நடைபெறும் மாநாடு இருக்கும். அதற்கு முன்னுரை எழுதும் கூட்டம் தான் இந்த கூட்டம்.இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நம் பலத்தை காட்டுவோம்.

நம் எண்ணம் செயல் எதுவாக இருந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் நாம் செல்வதற்கு மாநாடு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:

சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடைபெறும் – மக்களையும் நாங்கள் சந்திப்போம்

ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் மாநாடு கழகத்தின் சட்ட விதியை அபகரித்த சர்வாதிகார கும்பலை நீக்கும் மாநாடாக அமையும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு தந்த உரிமை மீட்டெடுக்கப்படும் – உறுதியாக சட்டப் போராட்டத்திலும் நாங்கள் வெல்வோம் – எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் பணியாற்றிய அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை மீண்டும் நடத்துவோம்

சசிகலா தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைப்போம் – எம்ஜிஆர் ஜெயலலிதா அனைவரையும் ஒருங்கிணைத்து எப்படி இந்த இயக்கத்தை நடத்தினார்களோ அதுபோலவே நாங்களும் நடத்துவோம்

ஒன்றரை கோடி தொண்டர்களின் குரலாகவே நாங்கள் ஒலிக்கிறோம் – தொண்டர்கள் நினைத்தால் மீண்டும் இந்த இயக்கத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் – கர்நாடக தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் இரட்டை இலையை நாங்கள் கேட்டு பெறுவோம்.

பாஜக தேசிய கட்சியாக இருக்கிறது அவர்கள் எண்ணத்தின் படி செயல்படுகிறார்கள் நாங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா  எண்ணத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி அணிக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பதாக இருப்பது தோற்றம் தானே தவிர உண்மை அல்ல.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவுடன் ஆன்லைன் ரம்மி  தடை  மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது நல்ல ஏற்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவையும் தினகரனையும் நேரில் சென்று அழைப்பீர்களா என்கிற கேள்விக்கு : பொறுமையாக இருந்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்றார்

மாநாட்டிற்குப் பின்பு ஓபிஎஸ் அணியின் நிர்வாகத்தில் மாற்றம் வருமா என்கிற கேள்விக்கு யூகமான கேள்வியாக உள்ளது என பதில் அளித்தார்.

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா, தினகரனை அழைப்பேன் என ஓபிஎஸ் கூறிய நிலையில், மாநாட்டில் பங்கேற்பீர்களா என தினகரனிடம் கேட்டதற்கு, இன்னும் 10 நாட்கள் இருக்கிறது.  மாநாட்டுக்கு அழைக்கட்டும், அப்புறம் பார்ப்போம் என்று அவர் கூறினார். கலந்து கொள்வேன் என தினகரன் உறுதியாக கூறாத நிலையில் சசிகலாவும் கலந்து கொள்வாரா என்பது  சில நாட்களில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!