Skip to content
Home » திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை  7 மணி அளவில்  புங்கனூருக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  இது மகளிர்  இலவச பஸ்  என்பதால்   பஸ்சில் கூட்டம் நிரம்பி இருந்தது.   பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், பணிக்கு செல்போர் என ஏராளமானோர்  பயணித்தனர்.

திருச்சி ஆர் சி மேல்நிலைப்பள்ளி அருகே  பஸ் வந்தபோது  ஓட்டுனர் கணபதி(56)க்கு லேசான   நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ஒரு கையால்   நெஞ்சை பிடித்துக்கொண்டு ஒரு கையால்  பஸ்சை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென அவரது முகத்தில்  வலியின்  தாக்குதல்  அதிகமாக தெரிந்தது. இதை முன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் கவனித்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி  சாலையின் இடதுபுறமாக ஓடியது. பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த கணபதி முயன்றார். ஆனால் அதற்குள் அவரது  வலி அதிகரிக்கவே அவரால் பஸ்சை நிறுத்த முடியவில்லை.  டெலிபோன் கம்பம், சில டூவீலர்கள் மீது மோதிய பஸ்  ஒரு கடையில் புகுந்தது. அப்போது பஸ்சை  டிரைவர் கணபதி நிறுத்திவிட்டு, ஸ்டீயரிங் மீது சாய்ந்து விட்டார்.

உடனடியாக முன்பகுதியில் நின்றிருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.டிரைவர் கணபதியை  பயணிகள், மற்றும் கண்டக்டர் மீட்டு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  அங்கு கணபதி உடலை பரிசோதித்த  டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்.

இறந்து போன டிரைவர் கணபதி  மணப்பாறை எம்.ஜிஆர் நகரை சேர்ந்தவர். இன்னும் 2 வருடங்களில் ஓய்வு பெற இருந்தார்.  அதற்குள் அவர்  பரிதாபமாக இறந்து விட்டார். தன் உயிர் போகும் நிலையிலும் பயணிகளை பத்திரமாக பாதுகாத்து உயிர்த்தியாகம் செய்து விட்டார் கணபதி என அந்த பஸ்சில்  பயணித்த பயணிகள் அனைவரும் கண்ணீர்மல்க கூறினர். கடந்த 2 மாதத்திற்கு முன் தான்   கணபதியின் மகளுக்கு திருமணம் நடந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!