உபியில் உள்ள ரேபரேலி தொகுதி இந்திரா காந்தி போட்டியிட்ட தொகுதி. பின்னர் அங்கு ராஜீவ் காந்தி, சோனியா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த முறை சோனியா மாநிலங்களவை எம்.பியாகி விட்டதால் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முதன் முதலாக பிரியங்கா இந்த முறை தேர்தல் களத்தில் குதிக்கிறார்.
அங்கு பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்டால் அவர் வெற்றி உறுதி என்பதால், அவரை எதிர்த்து போட்டியிட பாஜக பலமான வேட்பாளரை தேடி வருகி்றது. பிரியங்காவை எதிர்க்க சஞ்சய் காந்தியின் மகனும், முன்னாள் பாஜக எம்.பியுமான வருண் காந்தியிடம் பாஜக மேலிடம் பேசிப்பார்த்தது. ஆனால் வருண் தனது அக்காவை எதிர்த்து போட்டியிட முடியாது என மறுத்து விட்டார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி உமாபாரதியை பிரியங்காவுக்கு எதிராக நிறுத்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பஜ்ரங்தள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வினய்கத்தியர், சமாஜ்வாடி முன்னாள் தலைவர் மனோஜ்பாண்டே மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த ராகேஷ் பிரதாப்சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இவர்களில் ஒருவர் ரேபரேலியில் நிறுத்தப்படலாம்.