ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ள அவர் புல்தரை போட்டியான விம்பிள்டனிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடவையும் பட்டம் வென்றால் அதிக முறை விம்பிள்டன் கோப்பையை வென்றவரான முன்னாள் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (8 முறை) சாதனையை ,நோவக் ஜோகோவிச் சமன் செய்வார்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.2 சதவீதம் அதிகமாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.24½ கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.12¼ கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும். இரட்டையர் பிரிவில் மகுடம் சூடும் ஜோடியினர் ரூ..6¼ கோடியை பரிசாக பெறுவார்கள். முதல் சுற்றில் தோல்வியை தழுவும் வீரர், வீராங்கனைக்கு கூட ரூ.57 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் ஜோகோவிச், ஸ்வியாடெக், முன்னாள் சாம்பியன் அமெரிக்க மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், கேஸ்பர் ரூட் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டென்னிஸ் திருவிழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2, செலக்ட்1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.