கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் கார் இன்று பிற்பகல் 4 சக்கரங்களிலும் காற்று இறக்கிய நிலையில் இருந்துள்ளது. இதை அடுத்து அந்த வழக்கறிஞர் காற்று இறக்கிய நபர் யார் என்று விசாரித்த பொழுது அங்கு வந்த ஒரு இளைஞர் மற்றும் பெண் ஆகியோர் தாங்கள்தான் காற்றை இறக்கியதாக கூறி வாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அந்த வழக்கறிஞர் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு சென்று புகார் அளிக்கவே இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுதீஷ் காரில் காற்றை இறக்கிய இளைஞர் மற்றும் பெண்ணிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அப்பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த சக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே திடீரென அப்பெண் மற்றும் அவருடன் இருந்த இளைஞர் வழக்கறிஞர் ஒருவரை தள்ளிவிட்டுள்ளனர்.இதனால் வழக்கறிஞர்களுக்கும் பெண்ணுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுதீஷ் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பந்தய சாலை காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததுடன் சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைகலப்பு தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர் காரை பஞ்சர் ஆக்கிய பெண்! வாக்குவாதம்- தாக்குதல்
