தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட சொர்ணாகாட்டைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரஞ்சித் (27). இவர் 2017ம் ஆண்டில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று முறைகேடாக நடந்து கொண்டார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ரஞ்சித்தையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை செல்வம் (53), திருச்சி மாவட்டம், மருங்காபுரியைச் சேர்ந்த கே. சுந்தரபாண்டி (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து ரஞ்சித்துக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், செல்வம், சுந்தரபாண்டிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.