திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை. விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வரும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வழங்கப்படும். மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். ஒட்டுமொத்த வளர்ச்சியில் 10 சதவீத பங்களிப்பை தருகிறது தமிழ்நாடு. கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிக்கு கொண்டு வந்திருக்கிறோம். 2026ல் மட்டுமல்ல, என்றைக்குமே நாம் தான் ஆளப்போகிறோம்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒழுங்கா நிதி திருவதில்லை. நாம் அதிகமாக கொடுக்கும் நிதியில் பிரதமரின் பெயரை வைத்துக்கொள்கிறார்கள். இதற்காகத்தான் நான் ஏற்கனவே நகைச்சுவையாக சொன்னேன்.
மாப்ள அவர்தான், அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுடையது என்று. மிஸ்டு கால் கொடுத்து கட்சியை வளர்க்க பார்த்தார்கள். தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பாஜக. தங்களால் முடியாது என்பதால் அதிமுகவையும் இப்போது சேர்த்துக்கொண்டது.
பாஜக ,அதிமுகவின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாமல் அட்டூழிய அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மதத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. அவர்கள் கூட்டணி தான் ஆபத்தில் உள்ளது. தமிழக மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். 4 வருடத்தில் 3ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளோம். தங்கள் அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை மிஸ்யூஸ் செய்கிறார்கள். தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
மதுரையில் நடந்த மாநாட்டில் அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறார்கள். அதை அதிமுக கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. திமுக உங்களுக்கு அரணாக இருக்கும். நீங்களும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்கள் சதிவலைகளை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக, அதிமுகவுக்கு ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
