பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. 3 வது நாளான இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் 1200 காளைகளும், 700 காளையர்களும் பங்கேற்கிறார்கள்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூர்த்தி முன்னிலையில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்கேற்போம் என மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அடுத்தடுத்து 2 சுற்று போட்டிகள் நடந்தது. முதல் சுற்றில் மஞ்சள் உடை அணிந்த வீரா்களும், 2வது சுற்றில் பிங்க் நிற டீ சர்ட் அணிந்த வீரர்களும் பங்கேற்றனர். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் திமிறி சீறிப்பாய்ந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
வீரர்களும் பல காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளினர். அவர்களுக்கு டிவி, தங்ககாசு, சைக்கிள், பீரோ, என பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் அமைச்சர் உதயநிதி மோதிரம், தங்க காசு வழங்கினார்.
முதல் சுற்றிலேயே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் செந்தில் காளை முட்டியதில் காயமடைந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதுபோல பெண் போலீஸ் மாலதி என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் அங்குள்ள மருத்துவ சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தவிர 3 வீரர்களும் காயமடைந்தனர். 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 5 காளைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. 2 சுற்றிலும் சேர்த்து 8 காளைகளை அடக்கிய அபிசித்தர், அதிக காளைகளை அடக்கி நம்பர் 1 இடத்தில் இருந்தார். பின்னர் 3வது சுற்றுபட்போட்டி தொடங்கியது. சாம்பல் நிற உடையுடன் வீரர்கள் இறங்கினர். இதில் களம் கண்ட ஒரு கருப்பு காளை மைதானத்துக்குள் இறங்கியதும் கொம்புகளால் தரையில் போடப்பட்டிருந்த தேங்காய் நார்களை குத்தி வீசி எறிந்து கெத்து காட்டியது.
மைதானத்தில் அந்த காளை துள்ளி குதித்ததை பார்த்த வீரர்கள் யாரும் காளை அருகே போகவில்லை. எனவே அந்த காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி தங்க மோதிரம் அணிவித்தார்.
இன்றைய போட்டியை காண அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, நடிகர் அருண் விஜய் ஆகியோரும் வந்திருந்தனர். அருண் விஜய் அமைச்சர் உதயநிதியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். போட்டியை காண ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் கெத்து காட்டிய வீரர்களுக்கும், காளைகளுக்கும் கரகோஷம் செய்து வரவேற்பு அளித்தனர்.