Skip to content

அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனி மேரி திடீர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.    அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்த அறையை  மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான  ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உடனிருந்தார்.
  இந்த ஆய்வின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு துணை ராணுவத்தினர், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியோர்கள் மூலம் செயல்படுத்தப்படும் சுழற்சி முறை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை பார்வையிட்டு பதிவேட்டில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டார்.
இந்த ஆய்வின்போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் சந்திரசேகர் (பேரிடர் மேலாண்மை), வேல்முருகன் (தேர்தல்), இளவரசன் (ஆண்டிமடம்) மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!