அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, எதிரி ஜெயமணியை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது ஏற்கனவே தனியார் பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கியதில் கொலைமுயற்சி வழக்கும், மற்றும் தா.பழூர் காவல் நிலையத்திலும் ஒரு வழக்கும் உள்ளது.
இந்நிலையில் எதிரி ஜெயமணி தொடர்ந்து இது போன்ற குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் வெளியே வந்தால் மேலும் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட கூடும் என்பதாலும் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்கள், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜ சோமசுந்தரம் அவர்கள் பரிந்துரை செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் மேல்பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன்படி இன்று 08.03.2023 ஜெயமணி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். அதற்கான ஆணை பிரதிகள் மத்திய சிறைக்கு வழங்கப்பட்டது.