தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருகருக்காவூரை அடுத்த சோத்தமங்கலம், அருள்மிகு கயிலாசநாத சுவாமி கோயில் வளாகத்தில் பனை விதைகளால் செய்யப்பட்ட விநாயகருக்கு நேற்று மாலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அக்கம் பக்கத்தில் பனை விதைகளை சேகரித்து விநாயகராக வடிவமைத்திருந்தனர். இதன் மூலம் பக்தர்களிடம் பனைமரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.பக்தர்கள் பனை விதை விநாயகரை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று இந்த பனை விதைகள் ஏரிக்கரைகள் மற்றும் குளக்கரைகளில் தூவப்பட்டன. தமிழகத்தின் தேசிய மரமாகிய பனைமரத்தை பாதுகாக்கும் முயற்சி இது என்று இயற்கை ஆர்வலர்கள் இதை வரவேற்றனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் மாசு ஏற்படுகின்றது.
அதற்குப் பதிலாக இது போன்ற முயற்சிகள் வழிபாடாகும் போது, இயற்கை வளமும், மர வளர்ப்பும் முன்னெடுக்கப்படும்.
இதை மோகன், மற்றும் மீட் அமைப்பின் சபாபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் வழிகாட்டலில் இந்த வழிபாடு நடந்தது.