Skip to content
Home » உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Senthil

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (01.12.2023) தொடங்கி வைத்தார்.

முன்னதாக உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு “சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்” என்ற தலைப்பிலான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அரசு அலுவலர்கள் மற்றும் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
எய்ட்ஸ் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் நோக்கம். எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகள் மற்றும் உரிமைகளை மதிப்பதற்கு மக்களை பழக்குவது இந்த

நாளின் முக்கிய குறிக்கோள் ஆகும். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியில் ரோவர் பள்ளி, கோல்டன் கேட்ஸ் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி மற்றும் வாசன் கல்வி நிறுவனம் மற்றும் ரோவர் கல்லூரிகளில் பயிலும் நர்சிங் மாணவிகள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியின்போது, வருமுன் காப்போம் ஒழுக்கமாக இருப்போம், வாழ்க்கை அழகானது அதை ஆட்கொல்லிக்கு கொடுத்து விடாதே, வருமுன் காப்போம் எய்ட்ஸ் இல்லாத உலகை படைப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி நடந்து சென்றனர். இந்த பேரணியானது பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வழியாக சென்று பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்துடன் முடிவுற்றது. இந்நிகழ்வில் சுகாதாரத்துறை உதவி திட்ட மேலாளர் மரு.கலைமணி, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் மரு.விவேகானந்தன், பெரம்பலூர் மாவட்ட ஹெ.ச.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீநாதன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு உதவியாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு ஆலோசகர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!