அமெரிக்க கலவரத்தால் முடிவை மாற்றுவாரா டிரம்ப் ?
அமெரிக்கா…….. ஒருகாலத்தில் இந்த பெயர் கற்பனைக்கு எட்டாத கனவு உலகமாக தெரிந்தது. காரணம் ………..அந்த நாட்டின் செல்வ செழிப்பு. வளம் மற்றும் அறிவியல். இதன் காரணமாகவே அமெரிக்கா எப்போதும், தன்னை உலகின் போலீசாகவும், நாட்டாமையாகவும் காட்டிக்கொண்டு வந்திருக்கிறது.
உலகின் எந்த ஒரு மூலையில் பிரச்னை ஏற்பட்டாலும், அதில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதை மற்ற நாடுகள் அறிய முற்படும். ஆனால் அதற்குள் அமெரிக்கா அங்கே மூக்கை நுழைத்து விடும். தன் சொல்படி கேட்காவிட்டால் பிரச்னையை பெரிது படுத்தி, அந்த நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும்.
அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் சில நாடுகள் நன்மை அடைந்திருக்கலாம். ஆனால் பாதிப்பு என்பது அதிகமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
இப்படி உலகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த நாட்டாமையின் நிலைமை இன்று மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை.
அதிலும் குறிப்பாக டிரம்ப் 2ம் முறை ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து….. அமெரிக்கா தினம் ஒரு பிரச்னையை சந்தித்து வருகிறது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர புதிய வரி விதிப்புமுறையை கொண்டு வந்த டிரம்ப், அதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்து அதில் இருந்து பின்வாங்கினார். இங்கு தான் டிரம்பின் முதல் தோல்வி தொடங்கியது.
அடுத்ததாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் திட்டத்தால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமே டிரம்ப் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார்.
டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போதே சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்து இருந்தார். வெற்றி பெற்றவுடன் அதை செயல்படுத்துகிறார் என்றபோதிலும், அதை செயல்படுத்தும் விதம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை கை விலங்கு, கால் விலங்கு போட்டு வெளியேற்றிய விதம், மனித குலத்திற்கே அவமானகரமான செயலாகத்தான் பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, இந்தியா, சீனாவுக்கு அடுத்ததாக மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு அமெரிக்கா தான். அதாவது அமெரிக்காவில் 34 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் சுமார் 2 கோடி பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் குடியேறியவர்கள் மெக்சிகோ நாட்டினர் . சுமார் 40 லட்சம் பேர் இங்கு குடியேறி உள்ளனர். காரணம் இந்த நாடு அமெரிக்காவுக்கு மிக அருகில் உள்ளது. மெக்சிகோவை தொடர்ந்து, எல் சல்வடார், குவாட்டமாலா, ஹோண்டுராஸ், வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் மக்கள் சட்டவிரோதமாக இங்கு குடியேறி உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேரும் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள். சட்டவிரோதமாக இன்னொரு நாட்டுக்குள் குடியேறுவது என்பது தவறானது. அதை யாரும் நியாயப்படுத்த முடியாது.
வேலை வாய்ப்பு, அதிக வருவாய், சுகபோக வாழ்க்கை, ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு இவர்கள் இப்படி வந்தாலும், இதில் குற்றவாளிகளும் ஊடுருவி வர வாய்ப்பு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே சட்டவிரோத குடியேறிகள் எந்த நாட்டில் இருந்தாலும், அவர்கள் அந்த நாட்டிற்கு பிரச்னைக்கு உரியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
டெக்சாஸ், கலிபோர்னியா, சான்டியாகோ உள்ளிட்ட 12 மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை டிரம்ப் அரசு, கைது செய்து வருகிறது. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களை பார்த்தால், மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்கா, கைதிகளை இப்படி நடத்தலாமா என்று தான் கேட்கத் தோன்றும்.?
சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இப்படித்தான் இந்தியர்களும் இங்கு திருப்பி கொண்டு வரப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் வரை ஓயமாட்டேன் என டிரம்ப் பிடிவாதமாக இருக்கிறார்.
டிரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த 4 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரை தொடர்ந்து, சான்பிரான்சிஸ்கோ நகருக்கும் கலவரம் பரவியுள்ளது. அங்கு வாழும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் தெருக்களில் ஆங்காங்கே கூடி நின்று, அதிபர் டிரம்புக்கு எதிராக போராடிவருகிறார்கள்.
இதனால், லாஸ் ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோ நகரங்கள் முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அடித்து நொறுக்கப்பட்டன.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் முகமூடி அணிந்து மக்கள் வீதிகளில் வந்து போராடுகிறார்கள். எனவே முகமூடி அணிந்துள்ள அனைவரையும் கைது செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே முடங்கி போய் விட்டது.
போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்க அரசு தேசிய படையை சேர்ந்த 2,000 வீரர்களை லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு வரவழைத்துள்ளது. கடற்படையை சேர்ந்த 500 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
போராட்டக்களத்தில் செய்தி சேகரித்த ஆஸ்திரேலிய ஊடகத்தை சேர்ந்த பெண் நிருபரின் மீது போலீசாரின் குண்டு பாய்ந்தது. இதற்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம், மேயர் கரென் பாஸ் ஆகியோர் பதவி விலக வேண்டும்’ என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
இதற்கிடையே அதிபர் டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் உள்ளூர் கோர்ட்டில் அதிபர் மீதே வழக்கு தொடர்ந்தார். அதில் போராட்டக்கார்களுக்கு எதிராக 2000 தேசிய காவல் படை போலீசாரை குவித்தது சட்ட விரோதம் என தனது கண்டனத்தை ‛‛எக்ஸ்” தளத்தில் பதிவேற்றினார். இது வைரலாகி வருகிறது. இதனால் அதிபர் டிரம்ப், கவர்னர் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது.
டிரம்ப் இனவெறியுடன் செயல்படுகிறார் என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அவர்கள் கூறும்போது, அமெரிக்கா முழுவதும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முறையான ஆவணங்கள் இருந்தும் சமூக விரோதிகளை போல எங்களை கைது செய்து நாடு கடத்துகின்றனர்.
அமெரிக்கா எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானது கிடையாது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறி வாழ்கின்றனர்.
டிரம்பின் மூதாதையர்கள்கூட ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். இதுபோல அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 97 சதவீதம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். 3 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்க மண்ணின் மைந்தர்கள். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்றால் 97 சதவீதம் பேரையும் வெளியேற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் உரிமைக்குரல் எழுப்புகின்றனர்.
ஆனால், “லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் வரை ஓயமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டாம் ஹோமன் கூறுகிறார்.
வன்முறை என்பது எந்த காலத்திலும் ஏற்க கூடியதல்ல, இதற்கு சமூகமான முடிவு காணத்தான் வேண்டும்.
ஊர்ல ஒரு பிரச்னை வந்தா….. நாட்டாமையிட்ட முறையிடுவாங்க….
ஆனா…..இப்போ அந்த நாட்டாமைக்கே பிரச்னை வந்திருக்கு…..யாருட்ட போய் செல்ல?
டிரம்ப் நாட்டாமை….. தீர்ப்ப மாத்துங்கன்னு தான் சொல்லத் தோணுது.