நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பலர் கைதாகலாம்…. அதிர்கிறது கோலிவுட்
பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த், 46 வயதான இவர், ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பல வெற்றிப்படங்களையும் கொடுத்தவர். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து உள்ளார்.
இவர்தான் கொகைன் என்ற போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரது கைது நடவடிக்கை, தமிழ் திரை உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த கைது நடவடிக்கை திடீரென விபத்து போல நடந்து விடவில்லை.
போலீசார் பல நாட்களாக பொறி வைத்து, தகுந்த ஆதாரங்களுடன் இவரை பிடித்து உள்ளனர்.
கடந்த 22ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் அடிதடி, கலாட்டா நடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் பிரதீப் குமார் , அஜய் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி. காரணம் பிரதீப்குமார் சர்வதேச போதைபொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
பிரதீப் குமார், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர். இவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் மூலமாக கொகைன் என்ற விலை உயர்ந்த போதை வஸ்துவை வாங்கி வந்து சென்னையில் பலருக்கு சப்ளை செய்து உள்ளார்.
இந்த வியாபாரம் ஆன்லைன் மூலமாகவும் நடந்து உள்ளது. இந்த பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரும் இருந்ததால், போலீசார் இந்த விவகாரத்தை மேலும் தோண்டி துருவி விசாரிக்கத் தொடங்கினர். அப்போது ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதை போலீசார் உறுதி செய்தனர்.
இதற்காக அவர் ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்து உள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல 40 முறை அவர் கொகைன் வாங்கி உள்ளார். இந்த கொகைன் போதை பொருள் ஒரு கிராம் 12 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி உள்ளார்.
இந்த ஆதாரங்களை திரட்டிக்கொண்ட சென்னை போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி போனில் அழைப்பு விடுத்தனர். ஒரு விவரம் கேட்க வேண்டும் அதற்காக வாருங்கள் என்றனர்.
போலீசார்…… அவரிடம் கொகைன் தொடர்பாக எதுவும் கூறவில்லை. ஸ்ரீகாந்த்தும் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சென்றதும் தான் கொகைன் வழக்கில் வசமாக சிக்கிக்கொண்டோம் என்பதை உணர்ந்தார் ஸ்ரீகாந்த்.
முதலில் , தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. போதைபொருள் உபயோகிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது என்றார். இது தொடர்பாக போலீசாரிடம் வாக்குவாதமும் செய்தார்.
அப்போது தான் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதீப் குமார், கானா நாட்டை சேர்ந்த ஜான் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் உங்களிடம் விசாரிக்கிறோம். பிரதீப்குமாருக்கு நீங்கள் 4 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி இருக்கிறீர்கள். இதற்கான ஆதாரம் இதோ என ஆன் லைன் ஆதாரங்களை காட்டினர்.
அதன் பிறகு நடிகர் ஸ்ரீகாந்தால் எதுவும் பேசமுடியவில்லை. அதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர். அதில் ஸ்ரீகாந்த் கொகைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
கொகைன் போன்ற போதை பொருள் பயன்படுத்தி இருந்தால், 45 நாட்களுக்கு அதன் சிம்டம் ரத்தத்தில் இருக்கும். அந்த வகையில் ஸ்ரீகாந்த் வசமாக சிக்கிக்கொண்டார். அதன் பிறகு அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டில் சோதனை போட்டனர். அங்கு எதுவும் சிக்கியதாக தெரியவில்லை.
40முறை வாங்கிய போதை பொருளையும், இவரே பயன்படுத்தினாரா, அல்லது வேறு யாருக்காவது சப்ளை செய்தாரா என்றும் போலீசார் விசாரித்தனர். அதில் சிலரது பெயர்களை ஸ்ரீகாந்த் கூறியதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்தை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினா். அவரை ஜூலை 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று இரவு சென்னை புழல் சிறையில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டார்.
தனக்கு முதல்வகுப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீகாந்த் வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க உத்தரவிட்டார். பின்னர் ஜாமீன் கோரப்பட்டது. ஜாமீன் மனுவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீகாந்த், அளித்த வாக்குமூலத்தின்படி இன்னும் பல திரைத்துறையினர் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரபரப்பையும், விறுவிறுப்பையும் கொடுத்து வந்த திரைத்துறையினரே இப்போது அதிர்ச்சிக்கும், பரபரப்புக்கும் ஆளாகி இருக்கிறார்கள். ….. காரணம் கைது நடவடிக்கை ஸ்ரீகாந்த்தோடு நிற்காதாம். மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவதற்கான ஆதாரங்கள் போலீசாரின் கையில் கிடைத்துள்ளதாம். எனவே வரும் நாட்களில் மேலும் பலர் கைதாகலாம் என்று கோலிவுட் வட்டாராம் அதிர்கிறது.