11 பேரை பலிகொண்ட பெங்களூரு சோகத்திற்கு காரணம் யார்?
பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் ஐ.டி. தலைநகர் என்றும் சொல்வார்கள். ஆனால் கடந்த 2 தினங்களாக பெங்களூரு நகரம் இந்தியா முழுவதும் பரபரப்பு நகரமாகி இருக்கிறது.
தக் லைப் பட விழாவில் உலகநாயகன் கமலஹாசன் சொல்லிய ஒரு கருத்தால், கர்நாடக மாநிலத்தில் எழுந்த சர்ச்சை ஓய்ந்தது போல தோன்றியது. அன்று இரவு ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதால் வெற்றி கொண்டாட்டங்கள் கர்நாடக மாநிலத்தில் களை கட்டியது. ஆட்டம் பாட்டம், பட்டாசு வெடிப்பு, ஊர்வலம் என ரசிகர்கள் கொண்டாடினர்……..காரணம் ஐபிஎல் போட்டியில் 18 வருட ஏக்கம், எதிர்பார்ப்பு அன்றைய தினம் கைகூடியது.
எனவே கர்நாடக மாநிலத்தையும் தாண்டி, ஆர்சிபி அணியை நேசிக்கும் ரசிகர்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வெற்றியை கொண்டாடினர். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூட, ஆர்சிபியின் வெற்றியை வரவேற்று கொண்டாடினார் என்றால் அந்த வெற்றி சாதாரணமானது அல்ல என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மறுநாள் பெங்களூரு திரும்பிய வீரர்களுக்கு கர்நாடக அரசின் சார்பிலும், கிரிக்கெட் சங்கம் சார்பிலும் வரவேற்பு, பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. குஜராத்தில் இருந்து பெங்களூரு வந்திறங்கிய வீரர்களுக்கு அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, வீரர்கள் நேராக கர்நாடக மாநில சட்டமன்ற வளாகமான விதான சவுதாவுக்கு அழைத்து செல்லப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதுவரை எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது.
அடுத்ததாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவை காண மாநிலம் முழுவதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் பெங்களூருவில் குவிந்தனர். மைதானத்திற்குள் செல்ல ரசிகர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஸ்டேடியத்தின் அனைத்து வாயில்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் பல்லாயிரகணக்கில் குவிந்து உள்ளே செல்ல முயன்றனர். பெண்கள், இளைஞர்கள் கூட்டம் மிகவும் அதிகம்.
சின்னசாமி ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக 30 ஆயிரம் பேர் அமரலாம். ஆனால் நேற்று விழாவை காண 3லட்சம் பேர் திரண்டிருப்பார்கள் என கூறப்படுகிறது.
இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லை. போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி பிரயோகம் செய்து பார்த்தனர். இதற்கிடையே வீரர்கள் பாதுகாப்புடன் ஸ்டேடியத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். பாராட்டு விழாவும் தொடங்கியது.
இதை அறிந்த ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் எப்படியாவது சென்றுவிடவேண்டும் என முண்டியடித்தனர். நிலைமையை சமாளிக்க 12 மற்றும் 13வது கேட் வழியாக அனைவரையும் உள்ளே அனுமதித்தனர். அதாவது பாஸ் இல்லாதவர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மைதானத்திற்குள் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருவர் மீது ஒருவர் ஏறி விழுந்து உள்ளே சென்றனர். இதில் நுழைவு வாயில் கேட்டும் உடைந்து விழுந்தது. அதையும் கண்டுகொள்ளாமல் ரசிகர்கள் மைதானத்திற்குள் பாய்ந்தனர்.
இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீதும் ஏறி ஓடினார்கள். இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். ஒரு குழந்தையும் பலியானது சோகத்திலும் சோகம்.
9ம் வகுப்பு மாணவி திவ்யா வம்சி என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்து விட்டார். இவர் தனது தாயார் அஸ்வினி மற்றும் தாத்தா பாட்டியுடன் விழாவுக்கு வந்தவர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து விட்டார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் முதல்வர் சித்தராமையா, மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டார். துணை முதல்வர் சிவக்குமார், நடந்த துயர சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டதாக கூறுகிறார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். …..
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் போன உயிர் திரும்பாது. பெற்றோருக்கு குழந்தை கிடைக்காது. எனவே இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு தான்,
பிரதமர் மோடி அவர்களும், எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் அவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் அவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கூட்டங்களிலும், நெரிசல்களிலும் சிக்கி உயிர்பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சோக சம்பவங்கள் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது இந்திய மக்கள் அளவுக்கதிகமான அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்களை தங்கள் ரோல் மாடலாகவும் கருதுகிறார்கள். இந்த அன்பு மிகுதி தான் நடந்த துயர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் என்றாலும்,
இப்படிப்பட்ட விழா ஏற்பாடு செய்கிறவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். உடனடியாக இந்த பாராட்டு விழா நடத்தியதை தவிர்த்து இருக்கலாம். விழா ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை நன்றாக திட்டமிட்டு உத்தரவாதப்படுத்திய பிறகு விழா நடத்தி இருக்க வேண்டும்.
அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல விழா ஏற்பாடுகளை செய்து 11 உயிர் பலியாவதற்கு காரணமாகி விட்டார்கள் விழா ஏற்பாட்டாளாகள்.
இந்த சோக நிகழ்வு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். தவறு எங்கே நடந்தது என கண்டுபிடிக்கப்படும் . 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
முதல்வரின் இந்த உத்தரவு என்பது கண்கெட்ட பிறகு நடத்தும் சூரியநமஸ்காரம் போன்றது தான். எனவே எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். அதை தவற விட்டதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காதிருக்க , இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசும், விழா ஏற்பாட்டாளர்களும் செய்ய வேண்டும் . வழக்கம் போல எதிர்க்கட்சிகள், இந்த சம்பவத்தையும் அரசியலாக்க முனைவது தான் சோகத்திலும் பெரிய சோகம்.
காவல்துறையும் , உளவுத்துறையும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமலிக்க அரசும், அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.