Skip to content

மயிலாடுதுறை……..1டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்… 4 பேர் கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில், போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  வைத்தீஸ்வரன் கோவில் அடுத்த கற்கோயிலில் முத்துராஜ் என்பவரின் கடையில் வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 14 கிலோ இருப்பது தெரியவந்தது. அதனை கைப்பற்றி அவரிடம் விசாரணை நடத்தியதில் வைத்தீஸ்வரன் கோவில் வேலவன் நகரை சேர்ந்த ரமேஷ் என்பவது குடோனில் இருந்து தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக  தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ரமேஷ் குடோனில் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி லாமேக் தலைமையில் வைத்தீஸ்வரன் கோவில் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, காவல் உதவி ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட காவல்துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் குடோன் அருகில் நின்று கொண்டிருந்த மீன் வண்டியை போலீசார் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1000 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருப்பதை அறிந்து கைப்பற்றினர். மேலும் வாகன ஓட்டுநர்கள் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தை சேர்ந்த விஜயகுமார், கீழ்வேளுரை சேர்ந்த சரவணன், வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த கடை உரிமையாளர் முத்துராஜ் மற்றும் குடோன் உரிமையாளர் ரமேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விற்பனைக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா 1000 கிலோ புகையிலை பொருட்களை  பறிமுதல் செய்த காவல் துறையினரை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!