கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீடு திரும்பி உள்ளார்.
வழக்கம்போல் இன்று காலை ஆடுகளை பார்ப்பதற்கு பட்டிக்கு வந்த ராசப்பன் 7 பெரிய ஆடுகளும், 4 குட்டிகளும் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்து இருந்த்து. தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இது குறித்து
விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் தொடர்ந்து வெறிநாய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருவதாகவும், தமிழக அரசு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கால்நடை விவசாயி பரிதி நந்தா கூறுகையில்,
க.பரமத்தி சுற்று வட்டாரத்தில் கடந்த மாதத்தில் விவசாயிகளால் பாதுகாக்கப்பட்ட பட்டி கொட்டகையில் வெறிநாய் தாக்குதலுக்கு ஏராளமான ஆடுகள் இறந்துள்ளது. தற்போது எங்கள் பகுதியில் வெறிநாய்கள் புகுந்து 15க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மேய்ச்சலுக்கு விடும் ஆடுகளையும், வெறிநாய்கள் வேட்டையாடி கடித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. வெறிநாய் தாக்கியதில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஆடுகள் இறந்துள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் வாழ்வதாரம் பாதிக்கப்படும் என்றார்.