நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனம் சுக்குநூறாக நொறுங்கியதில், 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மற்ற ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 200 அடி ஆழம் என்பதால் மீட்புப் பணியில் பெரும் சவால்கள் நிலவின. பலத்த காயமடைந்த 7 வீரர்கள் மீட்கப்பட்டு, உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட வீரர்களின் விவரங்களைச் சேகரித்து வரும் ராணுவம், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

