விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணத்தடை ஏற்பட்டு அவதிப்பட்டனர். இது தொடர்பாக விமான நிலையத்தில் இண்டிகோ பணியாளர்களுடன் பயணிகள் சண்டையிடும் சம்பவங்கள் நடக்கிறது.இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்தநிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. விமானங்கள் ரத்து படிப்படியாக சரியாகும் என தெரிகிறது. அதுவரை பணியாளர் பணிநேர கட்டுப்பாடு விலக்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அட்டவணைகள் இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கி, அடுத்த 3 நாட்களுக்குள் முழுமையாக நிலைபெறும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இதற்கிடையே சென்னையிலும் 6-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இன்று ஒரே நாளில் மட்டும் 100- இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். வேறு விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

