திருச்சி மாநகராட்சியின் 2026 -2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கான மாமன்ற கூட்டம் இன்று (26.02.2026) காலை 11 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ் .ஜி. லூர்துசாமி கூட்ட மண்டபத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா தனக்கோடி,ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஆண்டாள் ராம்குமார் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கம்யூனிஸ்ட் தோழர் நல்ல கண்ணு மறைவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து மேயர் அன்பழகன் பேசியதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள முக்கியமான சாலைகளில் புராதன தெருவிளக்குகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இட வசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் கோட்டம் ஒன்றிற்கு தலா ரூ.1.00 கோடி மதிப்பீட்டில், மொத்தம் 5 கோட்ட அலுவலுகங்களுக்கும் ரூ.5.00 கோடி செலவில்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலையேராங்களில் குவியும் தூசுகள் உடனடியாக அகற்றப்பட்டு, நகரினை தூசியில்லா நகரமாகவும், ஆரோக்கியத்துடன் வாழவல்ல நகரமாகவும் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள்வீட்டு கழிவு நீரை உய்யக்கொண்டான் வாய்க்கால் கலப்பதை தடுத்து மாநகராட்சி புதைவடிகால் குழாய்களில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படும்
விடுபட்ட அனைத்து தெருக்களுக்கும் தெருப்பெயர் பலகைகள் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள், வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படும் மற்றும் சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இம்மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 4000 எண்கள் 40 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2.00 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்குவதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம்1 க்கு உட்பட்ட அருள்மிகு தாயுமானவர் திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் 23-05-1949 முதல் 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்த பத்திரத்தின் அடிப்படையில்மாநகராட்சி பராமரிப்பிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது
இதன் பரப்பளவு 5.30 ஏக்கர் ஆகும்
தற்போது மாண்பமைசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி விற்பனை அல்லாத மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது விரைவில் அப்பகுதியில் தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது
இவற்றிற்கு கீழ் கண்ட பணிகள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் துவங்கப்பட உள்ளது. தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கு 50 லட்சம்,அலங்கார வளைவுகள் கூடிய தெரு மின் விளக்கு அமைக்க 38 லட்சம் , தெப்பக்குளத்தை சுற்றி நடைமேடையுடன் கூடிய சிறுவர் சிறுமியர் பொழுதுபோக்கு பசுமைபூங்காக்கள் அமைக்க 68 லட்சம்
ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் உரிய அலுவலக தளவாடங்கள் வழங்கப்படும். 2021 முதல் 2026 ஆம் நிதி ஆண்டு வரை மொத்தம்11,206 திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது.இதன் மொத்த மதிப்பு 3917.52 கோடி ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் நல்ல கண்ணுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.இதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிதி குழு தலைவர் கவுன்சிலர் முத்துச்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

