Skip to content

 

மன்னிப்பு கேட்க முடியாது…..கமல் பதிலடியால் தக் லைப் பாதிக்குமா?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  பெரும் பொருட்செலவில்  இதனை கமலஹாசன்,  மணிரத்னம் ஆகியோர்  ரெட்ஜெயன்ட் நிறுவனத்துடன்  கூட்டு சேர்ந்து தயாரித்து உள்ளனர். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 38 வருடங்களுக்கு பிறகு  கமல், மணிரத்னம் கூட்டணி அமைந்துள்ளது. எனவே  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும் இந்த படத்திற்கு உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற  தக்லைப் இசை வெளியீட்டு விழாவில்   பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘‘உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது.அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது.

அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார். அதாவது  சிவராஜ்குமார் கன்னடத்துக்காரர், அவரது மொழியான  கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது  என்ற தொனியில்  கமல்ஹாசன்  குறிப்பிட்டார்.

உலகில் எல்லா மக்களுக்கும் தாய் மொழி உண்டு. ஆனால் தாய்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி  என்பது தமிழ் தான் என்று  மொழி அறிஞர்கள் கூறுவார்கள். தமிழ் அத்தனை தொன்மையானது.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”

என்று  9ம் நூற்றாண்டை சேர்ந்த   வெண்பா மாலை என்ற தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் அய்யனாரிதனார்    கூறி உள்ளார்.

தமிழ்மொழி அறிஞர் தேவநேய பாவாணர் தனது ஆய்வின் மூலம் தமிழ்  மொழி ஏறத்தாழ    இரண்டாயிரத்து ஐநூறு   ஆண்டுகளுக்கும்  பழமையான மொழி  என்கிறார்.

சங்க இலக்கியங்கள் இதற்கான சான்றாக உள்ளன. தமிழ் ……. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று    என்றும்  மொழி அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டு உள்ளனர். 

இதைத்தான் நடிகர் கமல் அந்த விழாவில்  குறிப்பிட்டார்.

ஆனால்  கர்நாடத்தில் உள்ள சிலருக்கு இது பிடிக்கவில்லை.இதனால் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா  கூட  கண்டனம் தெரிவித்திருப்பது தான்  வேடிக்கை.

கன்னடத்தின்  பெரும் வரலாறு, கமலஹாசனுக்கு தெரியவில்லை.  வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என  அவர் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அதே நேரத்தில் கர்நாடக மாநில   கலாச்சாரத்துறை அமைச்சர்  சிவராஜ், கமல்ஹாசனுக்கு  கடும் கண்டனத்தை  தெரிவித்துள்ளதுடன்,  கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்,  தக்லைப் படத்துக்கு கர்நாடகத்தில்  தடை விதிக்கப்படும். இது தொடர்பாக  கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு  உத்தரவிடுவேன் என்றும் அவர்  மிரட்டி உள்ளார்.

கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திராவும் தன் பங்குக்கு கண்டனத்தை தெரிவித்து  இந்த விவகாரத்தில் கர்நாடகத்தில் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்.

கன்னட அமைப்புகள் ஆங்காங்கே   தக்லைப்  சுவரொட்டிகளை கிழித்து  போராட்டங்களை தொடங்கி உள்ளன.

பொதுவாகவே தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் காவிரி பிரச்னை வந்தால் இப்படிப்பட்ட  பதற்றம், பரபரப்பு ஏற்படும். கடந்த சில வருடங்களாக அந்த பிரச்னை இல்லாத நிலையில் இப்போது மீண்டும் அந்த பிரச்னை  தக்லைப் மூலம் தலை தூக்கி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் , கர்நாடக தலைவர்கள் இந்த பிரச்னையை  அரசியல் ஆக்கிய எப்படி லாபம்  காணலாம் என்று தான் கணக்கு போடுகிறார்களே தவிர, இதனால் இரு மாநில மக்களின்   உறவு பாதிக்கப்படுமே என்று யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இதற்கு முன் காவிரி பிரச்னையில், நடிகர் சத்யராஜ் தெரிவித்த கருத்துக்காக  மன்னிப்பு கேட்டால் தான்,  கர்நாடகத்தில்   பாகுபலி படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று  மிரட்டல் விடுத்தனர்.

பல நூறு கோடி  ரூபாய் செலவில் எடுத்த படம், என்னால் தயாரிப்பாளர்  நஷ்டம் அடைந்து விடக்கூடாது என கருதிய  நடிகர் சத்யராஜ்  மன்னிப்பு கேட்டார்.  இதே போல இந்த கன்னட அமைப்புகள்  நடிகர்  ரஜினிகாந்துக்கும்  பலமுறை நெருக்கடி கொடுத்தனர்.

இப்படியாக தமிழ் நடிகர்களை மிரட்டும், இந்த கன்னட  அமைப்புகள்,  அண்டை மாநிலமான  தமிழ்நாட்டுட ன் நீண்ட உறவு,  தொழில் முறை  தொடர்புகள் வைத்திருப்பதை நினைத்து கூட பார்ப்பதில்லை. கன்னட   திரைப்படத்துறையை சேர்ந்த பெரும்பாலான கலைஞர்கள் இங்கு   பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழர்களோ, தமிழ் அமைப்புகளோ எந்த நேரத்திலும்  எந்த பிரச்னையும் செய்வதில்லை.  அவர்களையும் நாம்  கொண்டாடுகிறோம்.

ஆனால் காலாகாலமாக கன்னட அமைப்புகள்  தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள்.  அரசியல்   லாபத்துக்காக  அங்குள்ள அனைத்து கட்சிகளும்  இந்த போராட்டங்களை தூண்டி விடுமே தவிர, யாரும் புத்திமதி  சொல்வதில்லை.

அந்த வகையில் தான் இப்போது  தக்லைப்  பட விழாவில்  உலகநாயகன் கமல்ஹாசன் பேசியதை வைத்துக்கொண்டு  அரசியல் செய்யத் தொடங்கி விட்டனர்.    கமலை மன்னிப்பு கேட்க செய்யவேண்டும்.    அதன் மூலம் அவரை  சிறுமைப்படுத்தி விட்டோம் என மகிழ்ச்சியடைய வேண்டும் என்ற  எண்ணம்  கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு தலைவருக்குமே  இருக்கிறது என்பதை சில நாட்களாக  அங்கு நடந்து வரும் சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது.

ஆனால் உலக நாயகன்  கமல்,  இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவர் அல்ல.  படம் நஷ்டம் அடைந்தால்  அடையட்டும், இன்னொரு முறை சம்பாதிக்கலாம். ஆனால் தன்மானம் போனால்…. அதை  மீண்டும்…. மீட்டெடுக்க முடியாது  என்பதை உணர்ந்த உலக நாயகன்….. மன்னிப்பு கேட்க முடியாது  என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

‘கேரளாவில் நடந்த  தக்லைப் பட விழாவில் தான் இதனை கமல் தெரிவித்தார்.

தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர்.

நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக தோன்றும்;

நான் சொன்னதை உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாகத்தான் தோன்றும். மொழி குறித்து அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் துறையினர்தான் விவாதிக்க முடியும். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம். கர்நாடகத்தில் இருந்து விமர்சிப்பவர்களையும் எனது குடும்பத்தினர்களாகவே கருதுகிறேன் என்று  அன்போடு கூறி உள்ளார்.

இந்த அன்பு வார்த்தைகள் கன்னடர்களுக்கு  புரியவா போகிறது. ?

அதே நேரத்தில் தமிழகத்தில், கமல்ஹாசன் நிலைப்பாட்டுக்கு,  பலரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.  விசிக தலைவர் தொல் திருமாவளவன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர்  கமல் கருத்தை வரவேற்று   உள்ளதுடன்,  தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்துள்ளது என்பதை அவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஆனால் அண்ணன், தம்பியாக  பழகும் தமிழர்களும், கன்னடர்களும்,  இந்த மொழிப்பிரச்னையால்  சண்டையிட்டுக்கொள்வது தேவையா?  என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,   நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு  என்ற பாரதியின் பாடலை நாம் நினைவில் கொள்வோம்.

 

 

 

error: Content is protected !!