தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா முன்னிட்டு மே 9, கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 12 ஆகிய இரு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.
தமிழக-கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில், மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவில் இருமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா மே 12- ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி திருவிழா நடைபெறும் அன்றையதினம் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதேபோல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.