திருப்பத்தூர் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்த கவி என்பவர் புதுப்பேட்டை பகுதியில் தமிழன் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். அப்போது வெங்களாபுரம் பகுதியை சேர்ந்த கௌதம், சஞ்சய், ஜெகன் ஆகிய மூன்று பேரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று 3,700 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு ஜிபேவில் பணம் அனுப்புவதாக கூறி ஒரு ரூபாய் மட்டுமே அனுப்பிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக வண்டியை எடுத்துச் சென்றனர்.
இதனை அறிந்த கவி அவர்களை பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தை வழி மறைத்து பிடித்து பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேருக்கும் தர்ம அடி கொடுத்தார். பின்னார் இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மூன்று பேரையும் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது மூன்று பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போலீசாருக்கும் மார்க்கெட்டின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் மிக வேகமாக பரவி வருகிறது. ஜிபே வில் பணம் அனுப்புவதாக கூறி மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு தப்பிச்சென்ற மூன்று பேருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு தரப்பினரும் புகார் கொடுக்காத காரணத்தால் போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.