Skip to content

3வது டி20: இங்கி வெற்றி, ஆட்ட நாயகன் வருண் சக்கரவர்த்தி

  • by Authour

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த இரு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ள இந்தியா,   3வது டி20 போட்டியில் நேற்று ஆடியது.

இந்தியா டாஸ் வென்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து துவக்க வீரர் பில் சால்ட் 5 ரன்னில் ஹர்திக் பாண்ட்யாவிடம் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக ஆடி 28 பந்துகளில் 51 ரன் குவித்து வலுவான அடித்தளம் அமைத்து தந்தார். பின் வந்த வீரர்களில் லியாம் லிவிங்ஸ்டோன் மட்டும் 43 ரன் எடுத்தார். மற்றவர்கள் சிறப்பாக ஆடாததால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது.
இந்திய பந்து வீச்சாளர்களில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி அற்புதமாக பந்து வீசி 24 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 3 ரன்னிலும், அபிஷேக் சர்மா 24 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் தந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இம்முறையும் வெறும் 14 ரன் எடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து, கடந்த போட்டியில் அபாரமாக ஆடி 72 ரன் குவித்த திலக் வர்மாவும் 18 ரன்னில் கிளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 35 பந்தில் 40 ரன் அடித்து வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஓவர்டன் 3 விக்கெட், ஆர்ச்சர் மற்றும் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தத போதும்,  இந்திய வீரர்  வருண் சக்ரவர்த்தி  ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  இன்னும்( 31ல் புனே, 2ம் தேதி மும்பை)  இரண்டு போட்டிகள் உள்ள நிலையில்,  தொடரை கைப்பற்ற இரு அணிகளும் இனி வரும் போட்டிகளில் கடுமையாக  ஆடும் என்பது உறுதி

error: Content is protected !!