திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபு (50). லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கில் சிக்க வைக்க, தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனையோடு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் பணியாற்றும் சிலரின் உதவியோடு போலி ரெய்டு திட்டத்தை செயல்படுத்தினர்.
கடந்த நவம்பர் மாதம்17ம் தேதி இரவில் துணை இயக்குனர் அலுவலகத்தில் ரூ 2.50 லட்சத்தை ஒரு மர்ம நபர் மூலம் வைத்து அந்த நபர்களே லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சோதனை நடத்த கட்டாயப்படுத்தினர். அதே நபர்களே பத்திரிகையாளர்களுக்கும் சோதனை குறித்து தகவல் தெரிவித்தனர். சரவணபாபு மீது கணக்கில் வராத பணம் வைத்திருந்ததாக வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிர் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் மர்ம நபர் முன்தினம் இரவில் பணம் வைத்து சென்ற காட்சிகள் பதிவானதால் போலி ரெய்டு திட்டம் அம்பலத்துக்கு வந்தது.
சரவணபாபு புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தற்போது தீயணைப்பு துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை வைத்த விஜய் (31) மும்பையில் கைது செய்யப்பட்டார். இவரது உறவினர் ஒருவரும் தீயணைப்புத் துறையில் பணியாற்றுகிறார். இதற்காக திட்டமிட்ட தூத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த் அவரது உறவினர் முத்து சுடலை ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். திட்டத்தை செயல்படுத்திய திருநெல்வேலி டவுன் தீயணைப்பு வீரர் மூர்த்தி மற்றும் சென்னை அம்பத்தூர் தீயணைப்பு வீரர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெருமாள்புரம் ஸ்டேஷன் வைத்து விசாரணை நடந்தது. இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் கடைநிலை ஊழியர்கள்.
இத்திட்டத்தை செயல்படுத்த ரூ 5 லட்சத்தை அனுப்பி வைத்த கோவை தீயணைப்பு துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையில் நீண்ட காலமாக பணியாற்றும் சிலர் இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளனர். இவர்கள் அனைவரது மொபைல் போன் எண்களையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்ததில் சரவண பாபுவை சிக்க வைக்க ஒரு மாதமாக திட்டமிட்டதும், இதற்காக வாட்ஸப் குழு ஒன்றை உருவாக்கியதும் தெரியவந்துள்ளது.

