தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இவை புதுவையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் (நவ.29), நாளையும் (நவ.30) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக நேற்று இரவு முதல் தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று வட தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் என மொத்தம் 54 விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதன்படி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூரு, ஹைதராபாத், இலங்கை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறப்பாடு மற்றும் வருகை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

