Skip to content

அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்… 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமலைகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், சமையலர் பாப்பாள் மீது சாதிய ரீதியில் தாக்குதலும் நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். எஞ்சிய 35 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 31 மீது வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு பள்ளி சமையலர் பாப்பாள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பெண் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. எஞ்சிய 25 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரமும் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!