தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்.,2ம் தேதி தசராவும், அக்., 20ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, வெளியான அறிவிப்பில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகையானது, ரயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரயில்வே கார்டுகள், ரயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும். ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

