தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய இந்த தடை காலம் தொடர்ந்து 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடை காலத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.
இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதற்கு நிவாரணமாக தமிழக அரசு ஒவ்வொரு மீனவருக்கும் தலா ரூ.8 ஆயிரம் வழங்குகிறது.இந்த நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை செயலாளர் சுப்பையன், மீன்வளத்துறை ஆணையர் கஜலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மீனவர் நல வாரிய துணைத்தலைவர் மல்லிப்பட்டினம் ஏ. தாஜூதீனும் இதில் கலந்து கொண்டார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ரூ. 8000 தடைகால நிவாரண நிதியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
மற்ற மீனவர்களுக்கும் இன்று முதல் நிவாரணத்தொகை, அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மீன்பிடி தடை கால நிவாரணத்தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், மீனவர் நல வாரிய துணைத்தலைவர் மல்லிப்பட்டினம் ஏ. தாஜூதீன் நன்றி தெரிவித்து உள்ளார்.
