இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்
தமிழ்நாட்டில் 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி தயாரித்த தேர்தல் அறிக்கை . இதை திமுக மட்டும் சொல்லவில்லை. மத்திய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமே இதை ஒப்புக்கொண்டார். 2006ம் ஆண்டு தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்று அவர் பாராட்டினார். தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளும் அதை ஒப்புக்கொண்டன.
கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தயாரித்த தேர்தல் அறிக்கை இன்னும் பிரபலமானது. அதாவது கருணாநிதி தயாரித்த தேர்தல் அறிக்கை ஒட்டுமொத்த தமிழ்ப்படங்களுக்கான கதாநாயகன் என்றால்,
மு.க.ஸ்டாலின் தயாரித்த தேர்தல் அறிக்கை இந்தி, மராட்டி, கன்னடம், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம் என ஒட்டு மொத்த இந்திய மொழிப்படங்கள் அனைத்துக்குமான கதாநாயகன் ஆகி விட்டது. அதாவது ஆல் இண்டியா சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறது மு.க. ஸ்டாலின் தயாரித்த தேர்தல் அறிக்கை
ஆம்……. தமிழகத்தில் 2021ல் திமுக தயாரித்த தேர்தல் அறிக்கையில் , கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை அறிவித்தது. அப்போது அதனை அனைவரும் கேலி செய்தனர். இதை செய்ய முடியுமா? என வியப்புடன் கேட்டனர். பாரதிய ஜனதாவினர் இந்த திட்டத்தை எதிர்த்தனர்.
ஆனால் இந்தியாவே ஆச்சரியப்படும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினார் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின். ஆம் ……. தமிழ்நாட்டில் இன்று 1 கோடியே 14 லட்சம் குடும்பத்தலைவிகள் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள்.
இதை பெறும் ஒவ்வொரு குடும்பத்தலைவியும், இது எங்கள் தாய் வீடாம் தமிழக அரசிடம் இருந்து சீர்வரிசையாக வருகிறது என பாராட்டுகிறார்கள். இன்னும் பலர் எங்கள் அண்ணன் ஸ்டாலின் தருகிறார் என போற்றுகிறார்கள்.
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் குடும்பத்தலைவிகள் அனைவரும் இதனை பெற்று குடும்பத்தின் சில தேவைகளையும், தங்களுக்கான அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது, இதனை எதிர்த்த பாஜக 2023க்கு பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களில் நடந்த ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்து தான் வெற்றி பெற்று உள்ளது. குறிப்பாக மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி என அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. ஆனால் பெயரை மட்டும் மாற்றி வைத்துக்கொண்டது.
இது தவிர கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கும் மாதம் 2500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது 1 கோடியே 14 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வந்தபோதிலும், அத்துடன் முதல்வர் ஸ்டாலின் விட்டு விடவில்லை. இன்னும் அதிகமான குடும்பத்தலைவிகளுக்கு இந்த தொகையை வழங்க முடிவு செய்துள்ளார். அதற்காகவே வரும் 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து, அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இந்த முகாம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அடுத்த 2 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் அதிகமான குடும்பத்தலைவிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இதற்கான வருமான வரம்பு, மின்கட்டண வரம்பு, நிலபுலன்கள் தொடர்பான வரம்புகள் உள்ளிட்டவற்றை தளர்த்துவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் இன்னொரு பக்கத்து மாநிலமான ஆந்திராவில் வரும் சுதந்திர தினம் முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை அந்த மாநில முதல்வர் நாயுடு அறிவித்து உள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணத்திற்கான கையெழுத்து தான். இதன் மூலம் தினமும் பல லட்சம் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கிறார்கள். தங்களின் வருமானத்தில் தினமும் 50 ரூபாய் வரை சேமிக்கிறார்கள். இது பெண்கள் வாழ்வில் புதிய விடியலை தந்துள்ளது.
இதேபோன்று கர்நாடக மாநிலத்திலும் மகளிருக்கான இலவச பயணத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில் பெண்களுக்கான இலவச பயணத்தையும் சிலர் ஏளனம் செய்தனர். இதனால் பெண்கள் ஒரு இடத்தில் முடங்கி கிடக்காமல், வேலைக்காக பல இடங்களுக்கும் செல்கிறார்கள். இது பெண்களை முன்னேற்றும் ஒரு முற்போக்கு திட்டம் என இப்போது பாராட்டப்பட்டு வருகிறது.
இதுபோல தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இன்று காலை உணவு திட்டத்தையும் இந்தியாவில் பல மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கி விட்டன. வெளிநாடுகள் கூட இப்போது இந்த காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தொடங்கி இருக்கிறது என்பது முன்னோடியான தமிழகத்திற்கு கிடைத்த பெருமை.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மட்டும் அல்ல. குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது.
இந்தியாவின் மற்ற மாறிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகம், எப்போதும் நம்பர் 1 மாநிலமாக வெற்றிநடைபோடும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்து தமிழகம் வெற்றிநடை போட நாமும் வாழ்த்துவோம்.
=====
எழுத்து
S. சுவாமிதாஸ்.