திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட அணியாப்பூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் சமது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடந்த மார்ச் மாதம் சந்தித்து கோாிக்கை மனு அளித்தார்.
இந்த மனுவை பரிசீலித்த முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், தற்போது அணியாப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 50 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், அப்துல் சமது எம்.எல்.ஏவுக்கு தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து, அப்துல் சமது எம்.எல்.ஏ. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். கோரிக்கை மனு அளிக்கப்பட்ட 2 மாதத்தில் தனது கோரிக்கையை பரிவோடு கவனித்து நடவடிக்கை எடுத்து முதல்வருக்கு தொகுதி மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பதாக அவர் கூறி உள்ளார்.