பாமக தலைவர் யார் என்பதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் இந்த மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்ந்து ராமதாஸ், கட்சிக்கு நானே தலைவர் என்று அறிவித்தார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் நான் என்று அன்புமணி கூறுகிறார். இதனால் இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை மாற்றி வருகிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று அன்புமணி விரும்புகிறார். இதனை ராமதாஸ் எதிர்க்கிறார். இதுவே தந்தை, மகன் மோதலுக்கு முக்கிய காரணம் என்றாலும், இன்னும் பல்வேறு காரணங்களும் இருக்கிறது.
பாமகவில் உள்ள 5 எம்.எல்.ஏக்களில் 3 பேர் அன்புமணி ஆதரவாளர்களாகவும், ஜிகே மணி, சேலம் அருள் ஆகியோர் ராமதாஸ் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். அதுபோல நிர்வாகிகளும் பிளவுபட்டு நிற்கிறார்கள்.
இந்நிலையில் அன்புமணி திடீர் பயணமாக, நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கட்சியை சட்டப்படி கைப்பற்ற அன்புமணி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதாவது வருகிற தேர்தலில் நான் தான் வேட்பாளர்களை அறிவிப்பேன் என்று ராமதாஸ் கூறியிருந்தார். கட்சியையும், சின்னத்தை கைப்பற்றி விட்டால், ராமதாஸ் அறிவிக்கும் வேட்பாளர் மாம்பழ சின்னத்தில் போட்டியிட முடியாது. எனவே கட்சியை கைப்பற்ற அன்புமணி தீவிரம் காட்டுகிறார். பாஜகவின் ஆதரவு அவருக்கு இருப்பதால் பாமகவை அன்புமணி கைப்பற்றி விடுவார் என்று கூறப்படுகிறது. எனவே வரும் தேர்தலில் ராமதாஸ் ஆதரவாளர்கள் போட்டியிட்டால் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம்.