தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கும்பகோணம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கும்பகோணம் பத்தடிபாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவர் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ரேஷன்அரிசி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் கும்பகோணத்தை சேர்ந்த கான்ராஜா (வயது 37) என்பது தெரிய வந்தது. அவர் அந்த பகுதியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 24 அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அதில் 1,200 கிலோ அரிசி இருந்தது.
கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் கான்ராஜா அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கால்நடை தீவனம் மற்றும் மீன் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கான்ராஜாவை போலீசார் கைது செய்ததோடு, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கான்ராஜாவை, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.