கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச இளைஞரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை, வாயை பொத்தி இளைஞர் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர், மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு தகவல் சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பரிசு அறிவித்து தொலைபேசி எண்ணையும் வெளியிட்டிருந்தது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மின்சார ரயிலில் செல்வது போன்ற புகைப்படம் வெளியானது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த நபரின் உருவத்தைப்போல், இருந்த உத்தரப்பிரதேச இளைஞர் ஒருவரை பிடித்து அவரிடம் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட அந்த உத்தரப்பிரதேச இளைஞர் குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டதாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகத்திலும் சிறு சிறு காயங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரிடம் போலீஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.