தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் மாமியாரும் வசித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகேயன் மாமியார் வீட்டைத் திறந்து வெளியே சென்றார். வீட்டினுள் அவரது 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர் . சிறிது நேரம் கழித்து கார்த்திகேயன் மீண்டும் மாமியார் வீட்டுக்கு வந்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோ லாக்கரில் வைத்திருந்த ஏழரை பவுன் தங்க நகைகள் , ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கு போலீசாருக்கு கார்த்திகேயன் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.