பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், பீகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை 2.20 மணியளவில் டெல்லி ரோஹினி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலரை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, காவல்துறையினர் மீது நான்கு ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் பதில் தாக்குதலில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்குர் (21) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். நால்வரையும் ரோஹினி மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் பீகாரில் கொலை, ஆயுதக் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்துள்ளார்.