பாமகவின் தலைவராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தான் தொடர்வார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதலே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் இருவரும் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே பாமகவை கைப்பற்றும் நோக்கில் இருவருமே தனித்தனியாக முயற்சிகளை மேற்கொண்டனர். ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற, அன்புமணி மாவட்ட வாரியாக பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். இதனை இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. அதேபோல் மாம்பழ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதமும் எழுதினார்.
அன்புமணியோ டில்லிக்கு நேரடியாக சென்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே பாமகவின் தலைவராக தொடர்வார் என்றும், பாமக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அன்புமணிக்கு என்று தெரிவித்தது.
இதனால் பாமகவின் சின்னமான மாம்பழம் அன்புமணி தரப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதால், அவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலுக்கு ஜிகே மணி தான் காரணம் என்று சிலர் பேச தொடங்கினர்.
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பு பாமகவின் செயல் தலைவரும், அவரின் மகளுமான காந்திமதி பேசி இருக்கிறார். அதில் காந்திமதி பேசுகையில்… ஜிகே மணியால் தான் குடும்பம் பிரிந்தது என்று சொல்வது தவறானது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் ஒன்று சேர்க்க ஜிகே மணி பல்வேறு முயற்சிகளை செய்தார். இந்த விவகாரத்தில் ஜிகே மணி மீது எந்த தவறும் கிடையாது.
அவரை பிடிக்காத சிலர் இப்படி பேசி வருகின்றனர். ராமதாஸை பொறுத்தவரை யார் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். தாம் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பார். ராமதாஸை யாராலும் ஒரு முடிவை நோக்கி தள்ள முடியாது. எடுத்த முடிவில் தீர்மானதாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

