தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. அரசியல் அவதாரம் எடுத்துள்ள விஜய்யை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருக்கும் இயக்குநர் ஹெச். வினோத், படம் குறித்தும் விஜய்யுடனான அனுபவம் குறித்தும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.“முதன்முதலாக விஜய் சாரை இயக்கியது சந்தோஷமான அனுபவம்.
‘ஜன நாயகன்’ அவரது கடைசிப் படம் என்று அறிவித்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கினோம். அதனால் ‘கடைசிப் படம்’ என்ற அழுத்தம் எதுவும் இல்லை. படத்தில் விஜய் சாரின் கதாபாத்திரம் பற்றி சஸ்பென்ஸ் வைக்க விரும்பவில்லை. அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்று முன்கூட்டியே தெரியப்படுத்திவிட்டோம்” என்று வினோத் கூறினார். படப்பிடிப்பு குறித்து பேசிய அவர், “மொத்தப் படப்பிடிப்பு 100 நாட்களைத் தாண்டியிருந்தாலும், விஜய் சாரை மட்டும் 84 நாட்கள் ஷூட் செய்தோம்.
அது எனக்கு 84 விஜய் சார் படங்கள் பார்த்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் ஒரு கம்ப்ளீட் ஸ்டார் ஆக்டர். அதோடு பக்கா டைரக்டரும் கூட. லைட்டிங், லென்ஸிங், ஷாட் தொடர்ச்சி என்று இயக்குநருக்குத் தெரிய வேண்டியதைவிட அதிகமாகத் தெரிந்திருக்கிறது” என்று பாராட்டினார்.
“ஒரு மாஸ் ஹீரோவுடன் வேலை செய்த சந்தோஷத்தோடு, டைரக்ஷன் பற்றி முழுமையாகத் தெரிந்த ஒருவருடன் பணியாற்றிய திருப்தியும் கிடைத்தது. கேமரா முன்னால் நின்ற ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாக இருந்தது” என்று வினோத் நெகிழ்ச்சியுடன் கூறினார். படத்தின் கதை ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்த நிலையில், “கவலைப்பட வேண்டாம். இது ஒரு தளபதி படம். ஒரு ஷோ மட்டும் பாருங்கள்” என்று உறுதியளித்தார்.

