Skip to content

ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (43), கோவில்பட்டி பிரதான சாலையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக இரவு வியாபாரம் முடிந்த பிறகு, ஓட்டலின் உள்புறக் கண்ணாடி கதவு மற்றும் வெளிப்புற ஷட்டர் ஆகியவற்றை முழுமையாகப் பூட்டாமல், வெறும் மூடிவிட்டு மட்டும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு, கல்லாப்பெட்டியில் இருந்த வசூல் தொகையான 2 லட்சத்து 3 ஆயிரத்து 875 ரூபாயை அப்படியே வைத்துவிட்டு, ஷட்டரை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை ஓட்டலுக்கு வந்த அவரது மாமனார், கல்லாப்பெட்டி திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே இருந்த பணம் முழுவதும் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், ஓட்டலில் பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டல் ஷட்டர் மற்றும் கதவுகள் பூட்டப்படாமல் சாதாரணமாக மூடி வைக்கப்பட்டிருப்பதை நீண்ட நாட்களாக நோட்டமிட்ட மர்ம நபரே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வியாபாரிகள் தங்களது கடைகளை முறையாகப் பூட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என இச்சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!