Skip to content

தலைவர்களை சாடும்போது அமைதி- எடப்பாடி தலைதான் தொங்கியுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு பதிலடி

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டுவரும் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், சி.எம்.டி.ஏ சிஇஓ சிவஞானம், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் மற்றும் பலர் இருந்தனர். இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 6000 கோடி ரூபாய் கடந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு திடல், பேருந்து நிலையங்கள், முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் இந்தமாத இறுதிக்குள் 10 முதல் 15 முதல்வர் படைப்பகங்கள் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 3.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட கன்னிகாபுரம் விளையாட்டு கால்பந்து மைதானம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குத்துச்சண்டை, டென்னிஸ், செஸ், கேரம் போன்ற பல்வேறு தளங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழைத்து வருவதாகவும் இந்த மாதம் 20ம் தேதிக்குள் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் வீரர்களின் கொண்டுவரப்படும்.

தமிழகம் தலை நிமிரும் என்ற பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். ஆனால் ஏற்கனவே தலை தொங்கிவிட்டது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளாரே? தொங்கிப்போன தலை எடப்பாடி பழனிசாமி உடையதுதான். அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டுள்ள அந்த இயக்கம் அண்ணாவை சாடும்போது அமைதியாக உள்ளார்கள். எம்ஜிஆரை சாடும்போதும் மவுனமாக உள்ளனர். ஜெயலலிதாவின் பெயரை உதாசீனப்படுத்தி பேசும்போதும் வாய்மொழி இல்லாமல் மவுனமாக உள்ளனர். தங்களின் தலைவர்களை உதாசீனப்படுத்தி பேசியவர்களுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைதான் தொங்கியுள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் போல் தமிழக முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் நடைமேம்பாலம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாத இறுதிக்குள் அந்த நடைமேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நெல்லையப்பர் கோயிலில் யாரும் அவமதிக்கப்படவில்லை, அவமானப்படுத்தப்படவில்லை. நேர்த்தியாக உயர் தர உணவு தான் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. அரசியலுக்காக பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை.

தவறுகள் எங்கு நடந்தாலும் திருத்திக்கொள்வோம். மகாபலிபுரத்தில் பிரச்னை நடந்த நேரத்தில் முதலமைச்சர் நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார். தவறு நடந்தால் உடனடியாக பரிகாரம் காண்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

error: Content is protected !!