திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த சுனில்- சீதா தம்பதியினர் கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திஷா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை இருந்தது. தாய் சீதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பெற்றோர் குழந்தையை கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் மேலதிக விசாரணைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாத குழந்தை திடீர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

