அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்த முருகசாமி மகன் விஸ்வநாதன் (61). இவர் தனியார் கம்பெனிகளில் செக்யூரிட்டியாக அவ்வப்போது பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராஜசேகரன் என்ற மகனும், ஜெயமணி என்ற மகளும் உள்ளனர்.
ராஜசேகரன் அன்னூர் பாரதி நகரில் விஸ்வநாதனுக்கு சொந்தமான மூன்று சென்ட் இடத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மகள் ஜெயமணி திருமணம் ஆகி பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் 2017ம் ஆண்டு விஸ்வநாதன் தனக்கு சொந்தமான மூன்று சென்ட் இடம் மற்றும் வீட்டை தனது மகன் பெயருக்கு கிரையம் செய்து கொடுக்கின்றார். அதன் பிறகு மகன் செலவுக்கு பணம் தராததால் கோவை வடக்கு ஆர்டிஓவிடம் புகார் தெரிவிக்கிறார்.
ஆர்டிஓ அந்தக் கிரையத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வீட்டை மீண்டும் தந்தை பெயருக்கு கிடைக்க செய்கிறார். இதை எதிர்த்து ராஜசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகனுக்கு வீடு சொந்தம் என தீர்ப்பளித்து மாதம் 5 ஆயிரம் ரூபாய் செலவுக்கு தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. உத்தரவு பிறப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மகன் தரவில்லை. இதை அடுத்து விஸ்வநாதன் மீண்டும் கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஆத்திரமடைந்த ராஜசேகர் ஒன்னக்கரசம்பாளையம் அருகே காரில் செல்லும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தனது தந்தை விஸ்வநாதன் மீது இடித்து தள்ளியுள்ளார்.
கீழே விழுந்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் சம்பவ இடத்தில் விசாரணை செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய ராஜசேகரை தேடி வருகின்றனர்.

