தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் ரங்கோலி கோலம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன . அதன் ஒரு பகுதியாக தஞ்சையின் அடையாளமாக விளங்கும் தலையாட்டி பொம்மைகளுடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 5 இடங்களில் இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை தொகுதியில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு , சாந்த பிள்ளை கேட் மேம்பாலம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்பட 5 இடங்களில் இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பதாகையில் தலையாட்டி பொம்மைகள் படத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தியும் வாசகங்கள் இடம் பெற்றன. மேலும் ECINET என்ற மொபைல் செயலியில் அனைத்து தேர்தல் சேவைகளையும் பெறுவது குறித்தும், தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

